Sunday, March 31, 2013

முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது என்பது இதுதானோ!

மார்ச் 31/2013; இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலை மற்றும் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது குறித்து நடவடிக்கை எடுக்காத மத்திய அரசை கண்டித்து திருச்சியில் பாரதிய ஜனதா சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது.

அதில் பேசிய அக்கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் இல. கணேசன் இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலை, தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது ஆகியவற்றை குறித்து பல்வேறு அமைப்புகள், அரசியல் கட்சிகள், மாணவர் இயக்கங்கள் போராடி வருகின்றன.  இதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காத மத்திய அரசை புறக்கணிக்க வேண்டும் என்று பேசினார்.

சிந்திக்கவும்: சிலதினங்களுக்கு முன்னர்தான் ஈழத்து படுகொலையை "இனப்படுகொலை" என்று தீர்மனம் இயற்ற முடியாது என ஆளும் காங்கிரஸ் கட்சி மட்டுமல்லாது,முக்கிய எதிர்கட்சியாக இருக்கும் பாரதிய ஜனதா கட்சியும் (BJP) கூறி இருந்தது. பிற நாடுகளின் மீது ஆதிக்கம் செலுத்தும் வகையில் இதுபோன்ற தீர்மானங்களை இந்தியா கொண்டு வருவதை அனுமதிக்க மாட்டோம்; அப்படியே மீறி பாராளுமன்றத்தில் அத்தகைய தீர்மானத்தை மத்திய அரசு கொண்டு வந்தாலும் அதை ஆதரிக்காது எதிர்ப்போம் என்று BJP திட்டவட்டமாக அறிவித்திருந்தது.

பாரதிய ஜனதாவின் இரட்டை நாக்கை இது போன்ற பல்வேறு விடயங்கள் மூலம் புரிந்து கொண்டனர் தமிழ் மக்கள். .ஈழத்து இனஅழிப்பு, தமிழக மீனவர்கள் படுகொலை ஆகியவற்றிக்கு எதிரான போராட்டங்கள் தமிழகம் எங்கும் கொழுந்து விட்டு எரிகிறது. தமிழர் சக்திகள் ஒன்று திரட்டப்பட்டு வருகின்றது. இதனால் ஹிந்துத்துவாவின் கூடாரங்கள் காலியாகி விடுமோ என்கிற பயத்தில்தான் இதுபோன்ற கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. ஹிந்துத்துவா பேசி, மத வெறியை தூண்டி அதன் மூலம் வட இந்தியாவில் கட்சி வளர்த்தார்கள்.  

ஆனால், தமிழ்நாட்டில் பெரியார், அண்ணா போன்ற தலைவர் செய்த சமூக சீர்திருத்த பிரச்சாரத்தின் தாக்கத்தால் தமிழகத்தில் ஹிந்துத்துவாவிற்கு காலூன்ற முடியாத ஒரு நிலை இருந்து வந்தது. இதனாலேயே பாரதிய ஜனதாவால் தமிழக அரசியலில் கால்பதிக்க முடியவில்லை. இந்நிலையில்,  தமிழகத்தில் ஏற்பட்டிருக்கும் மிகப்பெரிய தமிழர் எழுச்சியால், எங்கே  தங்களது கூடாரங்கள் மொத்தமாக காலியாகி விடுமோ என்கிற அச்சம் தமிழக பராதிய ஜனதாவை ஆட்டிப்படைக்கிறது. இப்படி கூட்டங்களை நடத்துவதன் மூலம் தமிழர்கள் ஆதரவை பெற்று ஓட்டு பொறுக்கலாம் என்று களம் இறங்கி இருக்கிறது தமிழக பாரதிய ஜனதா.

மக்களுக்கு மறதி உண்டு! அதற்காக முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க முடியுமா?  தமிழக பாரதிய ஜனதா இதைதான் செய்கிறது. 

No comments: